ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, 58 கிராம கால்வாயில் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டிபட்டி அருகே, வைகை அணைப்பகுதியில் 58 கிராம கால்வாய் மதகுப்பகுதி உள்ளது. இங்கிருந்த கடந்த 2018ல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டிபட்டி அருகே உள்ள அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி, டி.புதூர், மூணாண்டிபட்டி, மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் 33 கண்மாய்களில் தண்ணீர் நிரப்பி, பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2018ல் 58 கிராம கால்வாயில் சோதனை ஓட்டத்திற்காக தண்ணீர் திறந்தபோது, டி.புதூரில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் திறப்பதற்கு முன், 58 கிராம கால்வாயில் சீரமைப்பு பணிகளை நடத்த கோரிக்கை விடுத்தனர்.
இதனடிப்படையில், 58 கிராம கால்வாயை சீரமைக்க தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்தது. இதன்படி ஆண்டிபட்டி அருகே டி.புதூர் கிராமத்தில் உள்ள கால்வாய் பகுதி, திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பட்டி பகுதியில் உள்ள தொட்டிப்பாலம், மதுரை மாவட்டம், உத்தப்பநாயக்கனூர் பகுதியில் உள்ள கால்வாய் பகுதிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இப்பணிகள் 10ம் தேதிக்குள் நிறைவடையும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இம்மாத இறுதிக்குள் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.