×

திருப்பூர் அருகே மாஸ்க் அணியாத நபரிடம் சாதி பெயரை கேட்ட காவலர் காசிராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருப்பூர் : பெருமாநல்லூரில் மாஸ்க் அணியாத நபரிடம் சாதி பெயரை கேட்ட காவலர் காசிராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாதி பெயர் கேட்ட வீடியோ வைரல் ஆனதால் எஸ்.பி.திஷாமிட்டல் நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னதாக திருப்பூரில் பொது இடத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற தம்பதியை, என்ன சாதி என்று காவலர் ஒருவர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை மீறி வெளியில் செல்வோரிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் நடராஜன்‌, காவலர் காசிராஜா இருவரும் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணியாமல் வந்த சிவக்குமார் என்பவரை தடுத்து முக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபாரதம் விதித்து காவலர் காசிராஜா அவரின் தகவல்களை சேகரித்த போது சாதி பெயரையும் கேட்டுள்ளார்.சாலையில் வைத்து சாதி பெயரை கேட்டதால் ஆத்திரமடைந்த சிவக்குமார் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் இந்த காட்சிகளை வீடியோவாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த காட்சி வைரலாக பரவியதை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அவர்கள் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் காவலர் காசிராஜாவை நேரடி விசாரணைக்கு அழைத்தார். இந்நிலையில் சாதி பெயரை கேட்ட காவலர் காசிராஜா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

Tags : Policeman Kasirajan ,Tiruppur ,Armed Forces , tirupur,Mask, Caste, police transfered
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...