டெல்லி : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எனது சோகத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்றும் நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்,. பாஸ்வானின் மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பேரிழப்பு என்றும் எனது நண்பரை இழந்துள்ளேன் எனவும் மோடி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார், ஒவ்வொரு ஏழையின் வாழ்விலும் ஒளிவிளக்கு ஏற்ற வேண்டும் என பணியாற்றியவர் ராம் விலாஸ் பாஸ்வான் என்றும் பிரதமர் மோடி புகாழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய அரசியல் மற்றும் மத்திய அமைச்சரவை ராம்விலாஸ் பஸ்வானை எப்போதும் நினைவுகூறும் என குறிப்பிட்டுள்ளார்,. ஏழைகளின் நலன் மற்றும் பீகாரின் வளர்ச்சி குறித்த பஸ்வானின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்,.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் அரசியல் குரலை இழந்துள்ளனர் : ராகுல் காந்தி இரங்கல்
ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் வலுவான அரசியல் குரலை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்,.
சமூக நீதியின் உறுதிமிக்க தூண் சாய்ந்து விட்டது : திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சமூக நீதியின் உறுதிமிக்க தூண் சாய்ந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்,. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் சார்பாக நாடாளுமன்றத்தில் ஓலித்துக்கொண்டு இருந்த உரிமைக் குரல் ஓய்ந்து விட்டது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் வீடு திரும்பி - சமூகநீதிக்காகவும் - அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக் குரலாகவும் விளங்கி, தொடர்ந்து முன்னெப்போதும் போல் பாடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் - அவர் மறைந்தார் என்று வந்த செய்தி பேரிடியாக என் இதயத்தைத் தாக்கியிருக்கிறது. ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை இழந்து வாடும் அவருடைய அன்பு மகன் சிராக் பாஸ்வானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், தனது அமைச்சரவை சகாக்களில் அனுபவமிக்க ஒருவரை- மதச்சார்பற்ற மாமனிதர் ஒருவரை - இழந்திருக்கும் பிரதமருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிறப்பு சம்பவமாக இருக்கலாம் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் : முதல்வர் இரங்கல்
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பிறப்பு சம்பவமாக இருக்கலாம் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்புடையவர் பாஸ்வான் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர் பாஸ்வான் என்றும், கொள்கை மாறுபாடு கொண்ட மாற்று கட்சியினருடன் அன்பாக பழக கூடிய பண்பாளர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தன் வாதங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைசிறந்த நாடாளுமன்றவாதியான அவர், 1977 பொதுத்தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்தில் தன் வாதங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்று புகழாரம் சூட்டினார்.