கோவை: அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அவரை ஏற்பது குறித்து டெல்லி பாஜ முடிவு செய்யும்’ என்று துணைதலைவர் வானதி சீனிவாசன் விளக்கமளித்தார். கோவையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பாஜ ஏற்கனவே திமுக., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமானது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் இருக்கிறது. எதிர்காலத்தில், பா.ஜ.க தலைமையில்கூட கூட்டணி அமையலாம். கூட்டணி விஷயங்கள் எல்லாம் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும். அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அதேவேளையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? என்பதை எங்களின் தேசிய தலைமை தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.