வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கும் மைக் பென்சுக்கும் இடையே நேரடியாக அனல் பறக்கும் விவாதம் நடந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், உட்டாவில் உள்ள சால்ட்லேக் சிட்டியில் இவர்கள் பங்கேற்ற முதல் நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பேசியபோது கமலா கூறுகையில், ‘‘கொரோனாவை கையாளுவதில் டிரம்ப் அரசு மிகப் பெரிய தோல்வியை அடைந்துள்ளது.
அவருடைய தவறான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. அமெரிக்காவின் நண்பர்களுக்கு துரோகம் செய்துவிட்டு, சர்வாதிகரிகளை டிரம்ப் ஆதரிக்கிறார். டிரம்பின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கையால், தேச பாதுகாப்புக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. சீனா உடனான வர்த்தகப் போரிலும் டிரம்பின் அரசு தோல்வியடைந்து விட்டது. இதனால், அமெரிக்காவில் புதிய தலைமைக்கான நேரம் தற்போது வந்துள்ளது,’’ என்றார்.