சென்னை: தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றி செலுத்தினால் இடமாற்றமா? என திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தனது பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிப் பரப்புரைக்கு எதிராகக் கடலூரில் எந்த இடத்தில் பாம்பு, செருப்பு ஆகியவற்றை வீசி அவமானப்படுத்த நினைத்தார்களோ, அந்த இடத்திலேயே, தன் முன்னிலையிலேயே, தனது சிலைத் திறப்பு விழாவைக் கண்டு, தனது கொள்கையின் வெற்றியைத் தரணிக்குப் பறைசாற்றியவர் தந்தை பெரியார்.
கடலூர் கெடிலம் ஆறு - அண்ணா பாலத்தின் அருகே, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை இன்றும் கம்பீரமாக நின்று பழம்பெரும் வரலாற்றைப் பார்ப்போர்க்கு எடுத்துரைக்கிறது. அதைக் காணும் இளைய சமுதாயத்தினர், தம் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்ட - மானுடகுலம் போற்றும் அந்த மாமனிதருக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்துவது வழக்கம். கடந்த செப்டம்பர் 17 அன்று, தந்தை பெரியார் சிலைக்கு, கடலூர் காவல் நிலையக் காவலர்களான ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,
அப்போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களைக் காட்டி மூவரையும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதும், நன்றி காட்டுவதும், காவல்துறைக்கு எந்த வகையில் நிர்வாகரீதியான இடையூறுகளை - சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேறெந்தக் குறிப்பிட்ட காரணங்களும் இல்லாத நிலையில்,
அவர்கள் மூவரையும் மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட சமுதாயத்து இளைஞர்கள் - பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கல்வி கற்று, நல்ல வேலைவாய்ப்பினைப் பெற்று, சமூகத்தில் உயர்ந்த நிலை அடைந்திட வேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். அவர் எண்ணிய நிலையை அடைந்த இளைஞர்கள் - பெண்கள் உள்ளிட்டோர் அவருக்கு மரியாதை செலுத்துவது போலவே, காவலர்களும் நன்றி காட்டியுள்ளனர். இதில் காவல்துறைக்கு என்ன நிர்வாகப் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது? தந்தை பெரியார் அவர்கள் அரசியல் கட்சியின் தலைவர் அல்ல; தேசத்தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் காந்தி அடிகளைப் போல,
தமிழ்நாட்டிற்கும் திராவிட இனத்திற்கும் தந்தை பெரியார் பொதுவான தலைவர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அனைவருக்காகவும், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இறுதி மூச்சு வரை அயராமல் பாடுபட்ட அரிய தலைவர். அதனால்தான் அவர் மறைவெய்தியபோது, முழுமையான அரசு மரியாதையுடன், அவரது இறுதி ஊர்வலம் நடைபெற ஆணை பிறப்பித்தார் நன்றியுணர்வு கொண்ட அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். தங்களுக்குப் பதவி கிடைக்கச் செய்தவர்களுக்கே நன்றி காட்டாத அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு, இந்த வரலாறு எங்கே நினைவிருக்கப் போகிறது?
அதனால்தான், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்திய காவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய அனுமதித்திருக்கிறது காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அரசு. தந்தை பெரியாரின் தத்துவங்களில் முதன்மையானது சுயமரியாதை. தந்தை பெரியாரின் கொள்கை வார்ப்புகளில் முதன்மையானவர் பேரறிஞர் அண்ணா. அந்தப் பேரறிஞரின் பெயரைக் கட்சிக்கு ‘லேபிளாக’ வைத்துக் கொண்டு, பதவி சுகத்திற்காகவும், சொந்தப் பாதுகாப்புக்காகவும், சுயமரியாதையை அடமானம் வைத்து, சோற்றால் அடித்த பிண்டங்கள் போல, பிழைப்பு நடத்தும் எடுபிடி அ.தி.மு.க. அரசு, தனது டெல்லி எஜமானர்களுக்குப் பாதம் தொட்டு சேவை செய்யும் வகையில்,
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்படும் போக்கினை அனுமதித்து வருகிறது. தந்தை பெரியார் சிலைக்கு நன்றி செலுத்திய காவலர்களை இடமாறுதல் செய்திருக்கிறது. நிர்வாகக் காரணங்கள் எனும் சொத்தை வாதத்தை முன்வைக்கும் நிர்வாகத் திறனற்ற அ.தி.மு.க. அரசின் வெட்கக்கேடான செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடமாறுதல் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்று, மூன்று காவலர்களும் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணி செய்திட அனுமதித்திட வலியுறுத்துகிறேன் இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.