சென்னை : சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. தற்போது அதன் 2-ம் பாகமாக இரண்டாம் குத்து என்ற படத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்களும், காட்சிகளும் நிறைந்த படமாக உருவாகி உள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கடும் எதிர்ப்பை சம்பாதித்தன. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த அனைவரும் என்ன தான் அடல்ட் காமெடி படமாக இருந்தாலும் இப்படியா புகைப்படம் வெளியிடுவது?. இது அடல்ட் காமெடி படம் என்று சொல்வதற்கு பதிலாக அந்த மாதிரி படம் என்று நேரடியாக சொல்லிவிட வேண்டியது தானே என்றெல்லாம் விளாசினர் .
இந்த நிலையில், இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை கண்ணால் பார்க்கவே கூசியதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதனை பார்த்து கூசி இருக்குமோ? எத்தனை இளம் பருவத்தினர் இடையே கசட்டை துப்பி வைத்திருக்குமோ ? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கல்வியை போதிக்க இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம் என்றும் பாரதிராஜா வினவியுள்ளார். இதையெல்லாம் அனுமதி இன்றி வெளியிட கிடைத்த சுதந்திரம் தன்னை பதைபதைக்க வைத்துள்ளதாக கூறியுள்ள பாரதிராஜா, இத்தனை கற்பழிப்புகள், குழந்தைகள் சிதைவுகள் போதாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.