ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. இது, 2 பெண் விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. பிரான்சை சேர்ந்த இமானுவேல் சார்பெண்டிர், அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் டவடனா ஆகியோர், இந்தாண்டுக்கான நோபல் பரிசு தட்டிச் சென்றுள்ளனர்.
செல்களின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் மரபணு தொடர்பான ஆய்வுகளுக்காக இந்த நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிஆர்ஐஎஸ்பிஆர் சிஏஎஸ் எனப்படும் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை இவர்கள் உருவாக்கி உள்ளனர். இதனை பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் மரபணுக்களை மிக துல்லியமாக மாற்ற முடியும்.