சென்னை: செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யகலா(29). கடந்த 8.10.2019ல் தனது கணவரின் முதல் மனைவியின் 6 வயது குழந்தையின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தார். இதுதொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சூர்யகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சூர்யகலா இவ்வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு விண்ணப்பித்து, நீதிபதி ஆணையின்பேரில் கடந்த 18.11.2019 அன்று நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நிபந்தனை பிணையில் வெளியே வந்த சூர்யகலா கடந்த 14.7.2020 அன்று வேலூர் சென்று மாமியார் வீட்டில் உள்ள தனது குழந்தையை பார்க்க சென்றபோது, மாமியாரை அடித்து துன்புறுத்தி மேற்படி வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்டம், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி சூர்யகலா நிபந்தனை பிணையில் சிறையிலிருந்து வந்து சாட்சியை தாக்கி மிரட்டியதால், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நடந்து கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாலும்,
சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர், குற்றவாளி சூர்யகலாவின் பிணையை ரத்து செய்ய பரிந்துரைத்து, தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தாம்பரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் சேலையூர் காவல் நிலைய ஆய்வாளரின் மனுவை பரிசீலித்து, பிணையை மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி சூர்யகலாவுக்கு வழங்கிய நிபந்தனை பிணை ஆணையை கடந்த 5.10.2020 அன்று ரத்து செய்து உத்தரவிட்டார்.