×

கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட தேஜஸ் தனியார் ரயில் சேவை 17 முதல் மீண்டும் தொடக்கம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட தனியார் தேஜஸ் ரயில் சேவை வரும் 17ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் தனியார் தேஜஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி முதல் லக்னோ-டெல்லி இடையே தனியார் தேஜஸ் ரயில் சேவை தொடங்கியது. இதேபோல், அகமதாபாத்-மும்பை இடையே கடந்த ஜனவரி 19ல் ரயில் சேவை தொடங்கியது.

இந்நிலையில், நாடு முழுவதும் தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 19ம் தேதி முதல் தேஜஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது, கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதோடு, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த  தேஜஸ் ரயில் தனியார் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. வருகிற 17ம் தேதி முதல் இந்த ரயில்களின் சேவை தொடங்கும் என ஐஆர்சிடிசி நேற்று  அறிவித்துள்ளது.

* தேஜஸ் ரயிலில் சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், ஒரு இருக்கை இடைவெளி விட்டு பயணிகள் அமர வைக்கப்படுவார்கள்.
* ரயிலில் ஏறும் முன்பாக, பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை நடத்தப்படும்.
* ஒரு பயணி இருக்கையில் அமர்ந்த பிறகு, வேறு இருக்கைக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Tags : Tejas ,announcement ,Corona ,IRCTC , Tejas private train service resumed from Corona curfew: IRCTC
× RELATED ராஜஸ்தானில் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து