பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக நடக்க உள்ளது. இதில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு)-பாஜ கூட்டணியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி களமிறங்கி உள்ளது. பாஜ கூட்டணியில் தொகுதி உடன்படிக்கையில் மோதல் ஏற்பட்டதால், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி தனித்து விடப்பட்டது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஜேடியு 122 இடங்களிலும், பாஜ 121 இடங்களிலும் போட்டியிடும் என தொகுதி பங்கீடு நிலவரத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதில், ஜேடியு தனது பங்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்சாவுக்கு 7 இடங்களை தந்தது. இதே போல், பாஜ தனது பங்கில் இருந்து விகாஷில் இன்சான் கட்சிக்கு 11 இடங்களை தருவதாக நேற்று அறிவித்தது.