×

சட்டவிரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தர வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி அடங்கிய அமர்வு, கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளும் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என்று இடைக்கால உத்தரவிட்டனர்.

இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசுக்கு  வழங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் நிபந்தனை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,அரசு தரப்பில், தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் அளித்த விண்ணப்பங்கள் மீது எடுத்த முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்க முடியாத பகுதிகளில் இருந்து   பெறப்பட்ட 396 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மீண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது.

அதேசமயம், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்ககூடிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 690 நிறுவனங்களில் 510 செயல்பட தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் 15 சதவீதத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியுள்ளன. மீதமுள்ள 367 நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ஏழை மக்களுக்கு  தண்ணீர் வழங்காத நிறுவனங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியதில்லை. அந்த நிறுவனங்களை உடனடியாக மூட உத்தரவிடலாம்.

நிலத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிடும் புளோ மீட்டர் எனும் கருவியை பொருத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, மனுதாரர் சிவமுத்து தரப்பில், சென்னையில் மட்டும் விதிகளை மீறி அளவுக்கு மீறி அதிகளவில் தண்ணீர் எடுத்து வரும் 40 நிறுவனங்களின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இதேபோன்று தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

உரிமம் பெறாமலும்  புதுப்பிக்காமலும் இயங்கி வந்த தண்ணீர் நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கிய சலுகை திரும்ப பெறப்படுகிறது. நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கணக்கிடும் கருவிகள் பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags : water companies ,government ,iCourt , Take action against water companies operating illegally and report: ICC order action against the government
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...