கொல்கத்தா, :மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் சஜகதீப் தங்கருக்கும், மாநில சட்ட ஒழுங்கு பிரச்னை தொடர்பாக முட்டல் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆளுநர் ஜகதீப் தங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களே... அதிகாரபூர்வ அறிக்கையின்படி மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 223 பாலியல் பலாத்காரங்கள் மற்றும் 639 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை பார்க்கும் கவலைக்குரிய நிலையை பிரதிபலிக்கிறது.
வீட்டிலுள்ள தீயை அணைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தீ வேறு இடத்திற்கு பரவி விடுமுன், சட்டம் ஒழுங்கை சரிசெய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜியின் பொறுப்பில் உள்ள மாநில உள்துறை வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், ‘மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் தொடர்பாக ஆளுநர் அளித்த புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வ அறிக்கை, புள்ளிவிவரங்கள் அல்லது தகவல்களின் அடிப்படையில் இல்லை. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, தவறானவை. ஆளுநர் தனது டுவிட்களை திரும்பப் பெற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.