டெல்லி : இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் சிறுமிகளும்தான் பாலின அடிப்படை யிலான வன்முறைக்கு அதிகம் ஆளாவதாக இந்தியாவுக்கான ஐ.நா. அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாஜக ஆளக்கூடிய உத்தர பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து பாலியல் கொடூரத்திற்கு உள்ளாகி உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வகையில், “2018ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவாகி இருந்தது. இதுவே, 2019ம் ஆண்டில் 4 லட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக் கொண்டால், 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவிகிதமும், பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவிகிதம் வரையும் அதிகரித்துள்ளது.தலித் பெண்களுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 11,829 வழக்குகள் பதிவாகியுள்ளன என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹாத்ரஸில் பட்டியலின இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் தற்போது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பை ஆதரிக்கிறோம்.பின்தங்கிய சமூக குழுக்களைச் சார்ந்த பெண்களும் சிறுமிகளும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஹத்ராஸ் மற்றும் பலராம்பூரில் அண்மையில் நடந்த பாலியல் பலாத்கார மற்றும் கொலை சம்பவங்கள் சாட்சிகளாக உள்ளன.பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்படுவதில் பின்தங்கிய சமூகத்தினர் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதை அண்மைய சம்பவங்கள் நினைவூட்டுகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு வழங்க இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம். எனினும் அவை மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்< என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.