காளையார்கோவில்:காளையார்கோவில் அருகே 125 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் ஒரு மாதமாகியும் முளைக்காத நிலையில் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் மண் பரிசோதனை செய்வதுடன் இழப்பீடு வழங்க அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட இலந்தகரை ஊராட்சியை சேர்ந்த பாண்டி மாராந்தை கிராமம். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் சூழ்நிலையில் இப்பகுதி மக்களுக்கு பிரதான தொழில் விவசாயம் மட்டுமே.
கடந்த சில நாட்களாக பெய்த சிறுமழையை கொண்டு விவசாயிகள் 125 ஏக்கர் அளவிலான நிலத்தில் உழவு பணிகளை மேற்கொண்டு மானாவாரியாக நெல்லை விதைத்துள்ளனர். ஆனால் ஒரு மாதமாக விதைத்த நெல் இதுவரையிலும் முளைக்காமல் இருப்பதுடன் ஏக்கர் ஒன்றிற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும் விதைக்கப்பட்ட நெல் அனைத்தும் முளைக்காமல் உள்ளது ஏன் என தெரியாமலும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அரசு இப்பகுதியில் மண் பரிசோதனை செய்து காரணத்தை தெரிவிப்பதுடன் செலவு செய்த தொகைக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.