நாக்பூர்,: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 22 வயதான நேபாளி பெண்ணுக்கு, ஆண் நண்பர் பிரவீன் யாதவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, அந்த பெண்ணிடம் பிரவீன் யாதவ் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். அந்த பெண்ணுக்கு நிதி உதவி செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். ஆனால், எவ்வித நிதிஉதவியும் செய்யவில்லை. இடைப்பட்ட நாட்களில் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டியும் வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அங்கு, பிரவீன் யாதவுக்கு செல்வாக்கு இருந்ததால், போலீசார் அந்த பெண்ணின் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை.
மேலும், லக்னோவில் இருந்து தப்பி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள நண்பரிடம் பிரவீன் யாதவ் அடைக்கலம் புகுந்தார். இதற்கிடையே, அந்த பெண்ணின் தனிப்பட்ட அந்தரங்க படங்களை சமூகவலைதளங்களில் பிரவீன் யாதவ் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், நாக்பூருக்கு சென்று பிரவீன் யாதவை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்க முடிவெடுத்தார்.
அதன்படி, ஒரு டாக்ஸி பிடித்து லக்னோவில் இருந்து நாக்பூருக்கு கிட்டத்தட்ட 900 கி.மீ தூரம் சென்று, பிரவீன் யாதவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். பின்னர், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை தெரிவித்து புகார் தெரிவித்துள்ளார்.
அதில், ‘கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு பிரவீன் யாதவ் எனக்கு நிதிஉதவி செய்வதாக கூறினார். அவரை நம்பியதால், என்னை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். எனது அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வௌியிட்டுள்ளார். நேபாளத்தில் வசிக்கும் என் குடும்பத்தினரும், எனது கணவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக, எனது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவை நான் நீக்க முடியாதபடி, எனது சமூக ஊடக கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டார். எனவே, அவர் மீது வழக்குபதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நாக்பூர் போலீஸ் அதிகாரி அமிதேஷ்குமார் கூறுகையில், ‘கோரடி காவல் நிலையத்தில் பிரவீன் யாதவுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் லக்னோவில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் லக்னோவில் தங்கியிருந்தார். அதனால், இந்த வழக்கு நாக்பூரில் இருந்து லக்னோவுக்கு மாற்றப்பட்டது. இனி, அந்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.