திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே 10 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி போலீஸ் சரகத்தில் சிலர் அனுமதியின்றி முறைகேடாக நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி ரவளிபிரியா உத்தரவின்பேரில் ரூரல் டிஎஸ்பி வினோத், சிறுமலை வனச்சரகர் மனோஜ் ஆகியோரது தலைமையிலான போலீசார், வனத்துறையினர் நேற்று சிறுமலை, தவசிமடை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது தவசிமடை நாகம்மாள் கோயில் சிறுமலை ஓடை அருகே 10 நாட்டு துப்பாக்கிகள், ஒரு நாட்டு துப்பாக்கி பேரல் கிடப்பது தெரிந்தது. தவசிமடை விஏஓ திருவருட்செல்வம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, 10 நாட்டு துப்பாக்கிகள், ஒரு நாட்டு துப்பாக்கி பேரலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் நத்தம், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் பகுதி மலைக்கிராமங்களில் சிலர் உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, தேடுதல் வேட்டை தொடரும். கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு சாணார்பட்டி பகுதியில் ஒரு ஓடையோரம் கேட்பாரற்று கிடந்த 10 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.