மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது காதலி ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, அவரது தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ரியா, ஷோவிக், அப்துல் பாசித், ஜாயித் விலாத்ரா, திபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா ஆகியோர் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், ரியா சக்கரவர்த்தி, சாமுவேல் மிராண்டா, தீபேஷ் சாவந்த் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது. மேலும் ரியாவின் சகோதரர் ஷோவிக், அப்துல் பாசித் ஆகியோரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
நடிகை ரியாவை தீவிர விசாரணைக்கு பிறகு கடந்த மாதம் 9-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும், காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. ரியா மற்றும் அவரது தம்பி சோவிக்கின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்ததால், மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரது நீதிமன்ற காவலையும் வருகிற 20-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. நடிகை ரியா மற்றும் அவரது தம்பிக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தனர்.