சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மல்லிகார்ஜூன ராவ், தொழில்முறை பயணமாக சென்னை வந்தார். அப்போது, பொருளாதாரம் மற்றும் தமிழகத்தில் வர்த்தக மேம்பாடு தொடர்பாக, முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வங்கி சார்பில், அரசுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வழங்கினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம், 2ம் காலாண்டில் மீளத்துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, ஏராளமான மக்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளுக்கு மாறியுள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் 440 கிளைகள் மூலம், 426 கிராமங்களில் கிராம சம்பர்க் அபியான், கடந்த 2ம் தேதி துவக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பருக்குள் 4,000க்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் 25,000 கிராமங்களில் வங்கி சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில், வங்கிகள் கடன் வழங்களால் தொழில்துறைகளில் முதலீடு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.