மதுரை: மதுரை, காமராஜர் சாலையில் சிறார் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட சிறுவர் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பதாகவும், தரமற்ற உணவு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு கூறி வந்தனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள், சமையல் பொருட்கள் மற்றும் டிவி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை உடைத்து நேற்று ரகளையில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் தலைமையிலான போலீசார் சென்று, சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் ஒரு போலீஸ்காரருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சில குற்றவாளிகள் திடீரென பிளேடுகளால் தங்களை அறுத்துக் கொண்டு காயம் ஏற்படுத்திக் கொண்டனர். இதையடுத்து மருத்துவக்குழுவினர் அங்கு சென்று, காயமடைந்த 20க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.