சென்னை: குடும்ப சண்டையால் பதியப்பட்ட வழக்கை காரணம் காட்டி இளம்பெண்ணுக்கு போலீஸ் பணி நிராகரிக்கப்பட்டதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு பணி வழங்குமாறு உத்தரவிட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சினேகா என்ற இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. 2019ல் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து மற்றும் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன். பணியில் சேர இருந்த நிலையில் 2016ல் எனது தாய், சகோதரி மற்றும் நாத்தனாருக்கிடையே நடந்த மாமியார், மருமகள் குடும்ப சண்டையில் அப்போது மைனராக இருந்த எனது பெயரையும் குற்ற வழக்கில் போலீசார் சேர்த்ததை காரணம் காட்டி எனக்கு பணி வழங்க மறுத்துவிட்டனர்.
எனவே, எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், மாமியார், மருமகள் மற்றும் நாத்தனார் குடும்ப சண்டை ஒரு சாதாரண நிகழ்வுதான். இதை ஒரு பெரிய குற்ற நிகழ்வாக கருத வேண்டியது இல்லை. போலீஸ் வேலையில் சேர அவருக்கு எல்லா தகுதிகளும் இருக்கும்போது சாதாரண வழக்கை காரணம் காட்டி பணி வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. அந்த வழக்கும் தற்போது நிலுவையில் இல்லை. எனவே மனுதாரர் எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கும் பட்சத்தில் 4 வாரங்களில் உரிய போலீஸ் வேலை வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.