திருமயம்: அரிமளம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் பழுதான ஆழ்துளை கிணறை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரிமளம் முக்கியமானதாகும். இங்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள், புற நோயாளிகளாக வந்து செல்லும் நிலையில், தண்ணீர் தேவை முக்கியமானதாக உள்ளது. அதேசமயம் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள மரங்கள், சித்த மருத்துவ செடிகளை பராமரிக்க நீரில் தேவை அதிகமாக உள்ளது.
இதனிடையே 4 மாதத்திற்கு முன் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள ஆழ்துளை கிணற்றில் நீர் இல்லாததால் மருத்துவமனைக்கு போதுமான நீரின்றி நோயாளிகள், மருத்துவமனை பணியாளர்கள், மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு மருத்துவமனை எதிரே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தற்போது மருத்துமனைக்கு தேவையான நீர் குழாய் மூலம் வழங்கப்பட்டடு வருகிறது. இருந்த போதிலும் அது மருத்துமனைக்கு போதுமான நீர் வழங்க முடியாத நிலையில் தண்ணீரில் அழுத்தமும் குறைவாக வருவதால் கழிப்பறைகள், சித்த மருத்துவ செடிகளை பராமரிப்பதில் சிரமம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம் ஆரம்ப சுகாதார வளாகத்திற்குள் பழுதடைந்து காணப்படும் ஆழதுளை கிணறை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.