×

புதிய பாடத்திட்டத்தில் பாடப்பகுதிகளில் எவற்றை குறைக்கலாம்? கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வாரந்தோறும் நடக்கும் ஆய்வுக் கூட்டம் நேற்றும் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்க கல்வித்துறை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், அரசுத் தேர்வுகுள் இயக்குநர் உள்ளிட்ட கல்விஅதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய விவாதப் பொருளாக, புதிய பாடத்திட்டத்தில் குறைக்க வேண்டிய பாடப்பகுதிகள் பற்றி இருந்தது. மேலும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்கும் நிலை ஏற்பட்டால் குறுகிய காலத்தில் பாடங்களை நடத்தி முடித்து, எப்போது தேர்வுகளை நடத்துவது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதன்பேரில், இந்த கல்வி ஆண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவதா, பொதுத் தேர்வு நடத்தும் தேதியை ஒத்தி வைக்கலாமா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் பெரும்பாலும் ஒத்திப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நேற்று மதியம் 3 மணி அளவில் புதிய கல்விக் கொள்கை மீது தமிழக பள்ளிக் கல்வித்துறையின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும், புதிய கல்விக் கொள்கையின் சாதக பாதகங்களையும் ஆய்வு செய்தனர். இருப்பினும், அக்டோபர் இறுதி வரையில் ஊரடங்கு இருப்பதால் இடையில் பள்ளிகளை திறப்பது குறி்த்து எந்த முடிவும் எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

Tags : Ministry of Education , What can be curtailed in the new curriculum? Consultation with officials of the Ministry of Education
× RELATED சங்கரா கல்லூரியில் கருத்தரங்கம்