சென்னை: போலி கையெழுத்து மூலம் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்த கணக்காளரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சேத்துப்பட்டு தனம்மாள் தெருவை சேர்ந்தவர் அனிதா ஜெயபிரகாஷ். இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகரை சேர்ந்த லிகி தியாகு (30), கடந்த 10 ஆண்டுகளாக கணக்காளராக பணியாற்றி வந்தார். சமீபத்தில், ஆண்டு கணக்கு சரிபார்க்கப்பட்டபோது நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து வேறு ஒரு வங்கி கணக்கிற்கு ரூ.45 லட்சம் மாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த பணம் அனைத்தும் போலி கையெழுத்திட்ட காசோலை மூலம் மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து லிகி தியாகுவிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதுபற்றி நிறுவன உரிமையாளர் விசாரித்து வந்த நிலையில், லிகி தியாகு திடீரென வேலைக்கு வராமல் மாயமானார். இதுபற்றி டிராவல்ஸ் உரிமையாளர் அனிதா ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின்படி, சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணக்காளர் லிகி தியாகுவை தேடி வருகின்றனர்.