பொன்னேரி: பொன்னேரி அருகே திருப்பாலைவனத்தில் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் சுற்றுவட்டார இடங்களில் உள்ள இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மாசடைகிறது. இதை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் பொன்னேரி - பழவேற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைகிறது. இதனால் விளை நிலங்கள் பாதிப்படைகிறது. குடிநீரும் கிடைப்பதில்லை.
இறால் பண்ணைகளை அகற்றுமாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். எனினும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து இறால் பண்ணைகளை அகற்றுவது குறித்து எழுத்துப் பூர்வமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கிராமமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 144 தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒன்று கூடியதாக கிராம மக்களை போலீசார் கைது செய்தனர்.