நாகர்கோவில்: மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அருண் (32). அவரது மனைவி ஷைனி. நாகர்கோவிலில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியில் ஷைனி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அருண், தனது மனைவியை அழைத்துக்கொண்டு நேற்று காலை சொகுசு காரில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். கார் கல்லூரி வளாகத்தில் நுழைந்தபோது திடீரென இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். அப்போது கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலின்படி நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காரில் தீப்பற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.