×

பஞ்சாப்புக்கு எதிராக வாட்சன்-டுபிளசிஸ் அபார ஆட்டம் இதுபோன்ற ‘நெருப்பான’ தொடக்கம்தான் எங்களுக்கு தேவை: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று இரவு நடந்த 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன்  கே.எல்.ராகுல்-மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கம் அளித்தனர். மயங்க் அகர்வால் 26 ரன்னில் (19 பந்து, 3 பவுண்டரி) வெளியேற அடுத்து வந்த மன்தீப்சிங் 27 (16 பந்து, 2 சிக்சர்), நிகோலஸ் பூரன் 33 ரன்னில் (17 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்)  ஆட்டம் இழந்தனர். அரைசதம் அடித்த ராகுல் 63 ரன்னில் (52 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். 20 ஓவரில் பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் சேர்த்தது. சென்னை தரப்பில் ஷர்துல்தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 179 ரன் இலக்கை துரத்திய சென்னை அணியின் ஷேன் வாட்சன், பாப் டுபிளசிஸ் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். முதல் 6 ஓவரில் 60 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து நங்கூரமிட்ட இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். 17.4  ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன் எடுத்த சென்னை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாட்சன் 83 (53 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), டு பிளசிஸ் 87 ரன்னுடன் (53 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.  5வது ஆட்டத்தில் சென்னைக்கு இது 2வது வெற்றி. முதல் ஆட்டத்தில் வென்றிருந்த சென்னை ஹாட்ரிக் தோல்விக்கு பின் வெற்றிபெற்றுள்ளது. பஞ்சாப் 5வது போட்டியில் 4வது தோல்வியை சந்தித்தது. வாட்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 சின்ன விஷயங்களை நாங்கள் சரியாக, நேர்த்தியாகச் செய்திருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இதுபோன்ற ‘நெருப்பான’ தொடக்கம்தான் எங்களுக்குத் தேவைப்பட்டது. அடுத்துவரும் போட்டிகளிலும்  இதேபோன்ற தொடக்கத்தை, வெற்றிகளை எதிர்ப்பார்க்கலாம் என நம்புகிறேன்.வாட்ஸன் ஃபார்ம் பற்றி கவலைப்பட்டதில்லை. வலைப்பயிற்சியில் வாட்ஸன் சிறப்பாகவே செயல்பட்டார். நமக்கு என்னத்தேவை சூழலுக்கு ஏற்ப எவ்வாறு விளையாடுகிறார் என்பதுதான். டுபிளசிஸ் எங்களுக்கு நங்கூரம் போன்றவர்.  ஆட்டத்தின் நடுப்பகுதியில் நல்ல ஷாட்களை ஆடக்கூடியவர். அவ்வப்போது சில மாறுபட்ட ஷாட்களை ஆடி எதிரணியின் பந்துவீச்சாளர்களை குழப்பிவிடுவார். இருவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் இந்த ஆட்டத்தை நிரப்பிவிட்டனர்.

எங்கள் அணியில் வீரர்கள் தேர்வு என்பது நிலையானது. இந்த அணித் தேர்வுக்கு தலைமைப்பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்பிங்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். எந்த ஒரு திட்டமிடலாக இருந்தாலும், சரியாகச் செய்வோம். எங்களுக்குள்  திட்டமிடுதலில் விவாதங்கள் இருக்காது, ஒரே திட்டம்தான் அதுதான் எங்கள் உறவுக்கும் காரணம். கடந்த 3 போட்டிகளில் அடைந்த தோல்வி பற்றி சொல்வதென்றால், எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்தி இருக்கவேண்டும், இன்னும் பல  நெருக்கடிகளை அளித்திருக்க வேண்டும் அதைச் செய்யத் தவறிவிட்டோம்.ஒவ்வொரு அணியிலும் ஆக்ரோஷமான ஹிட்டர் இருப்பார்கள், அந்த ஹிட்டர்தான் எதிரணியின் பந்துவீச்சையும், பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையையும் சிதறடிப்பார்கள். அதுபோன்ற சரியான ஷாட்களை ஆடுவதற்கு சரியான தருணம்  எங்களுக்குத் தேவைப்பட்டது. அந்த சரியான தருணத்தை வாட்ஸன், டுபிளசிஸ் பயன்படுத்தி ஷாட்களை ஆடி மீண்டும் தங்களை நிலைப்படுத்திவிட்டார்கள்.

 இவ்வாறு தோனி தெரிவித்தார். ஆட்டநாயகன் விருது பெற்ற வாட்ஸன் கூறுகையில்  “கடந்த சில போட்டிகளில் பேட்டிங் தொழில்நுட்பத்தில் சில தவறுகள் இருந்ததாக நினைக்கிறேன். இந்தப் போட்டியில்மீண்டும் இயல்புக்கு வந்தது மகிழ்ச்சி. சிறப்பாக விளையாட வேண்டும் எனும் நோக்கம், பேட்டிங் பயிற்சி இரண்டும் சேர்ந்து  ஆட்டத்தை கொண்டுவந்துள்ளது. டுப்பிளசிஸ், நானும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் நிரப்பி இருக்கிறோம். சிறந்த வீரர் டுபிளசிஸ் அவருடன் சேர்ந்து விளையாடுவது மகிழ்ச்சிக்குரியது” எனத் தெரிவித்தார்.

பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், தொடர் தோல்வி கடினமாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். எங்கு தவறு செய்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் பேட்டிங் செய்தபோது ரன் எடுக்க கடினமாக   இருந்தது. இதனால் 178 ரன் நல்ல ஸ்கோர் என நினைத்தேன். முதல் 10 ஓவரில் விக்கெட் எடுக்காமல் ஓவருக்கு 10 ரன் கொடுத்தால் வெற்றி பெறுவது கடினம். நாங்கள் கடினமாக பயிற்சி செய்து தவறுகளை திருத்தி வலுவாக திரும்பி  வருவோம் என நம்புகிறேன், என்றார்.

Tags : Tony Interview ,match ,Watson-Dupleix ,CSK ,Punjab , Watson-Dupleix match against Punjab: We need a 'fiery' start like this: Interview with CSK captain Tony
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...