கோவில்பட்டி : ஓடிடியில் படங்கள் வெளியாவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலம் என்பதால் கடந்த 6 மாத காலமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கிடப்பில் உள்ள படங்களை சில நடிகர்களும்,தயாரிப்பு நிறுவனங்களும் ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘திரையரங்கு மூடப்பட்டு கிடப்பதால் தயாரிப்பாளர்களின் பொருளதாரத்தின் அடிப்படையில் சில படங்கள் மட்டும் ஓ.டி.டியில் வெளியாகி உள்ளது. இது தற்காலிக ஏற்பாடு என்று நினைக்கிறேன். இது தற்காலிக ஏற்பாடாக இருந்தால் சந்தோஷம் தான். நிரந்தரமாக இருந்தால் திரையரங்குகள் பாதிக்கப்படும். திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம். ஓடிடியில் படங்கள் வெளியாவதை தடுப்பது பற்றி திரைப்படத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓடிடி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு வரும் ‘ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது,அதிமுக செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன.யார் முதல்வர் என்று கேள்வி அங்கு எழவில்லை. அதிமுகவில் பிரச்சினையில்லை.அரசு சிறப்பாக செயல்பட ஓபிஎஸ் துணையாக இருக்கிறார். அவர் துணை முதல்வர் மட்டுமல்ல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமாக உள்ளார். அவரை கட்சி நிர்வாகிகள் சென்று சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். அவர் பெரியகுளம் வந்திருக்கும் நேரத்தில் எளிதாக சென்று பார்க்கலாம் என கட்சி நிர்வாகிகள் சந்திப்பது வழக்கமான நடைமுறைதான். இதை அரசியலாக்கி பார்ப்பவர்களுக்கு அரசியலாகத் தெரியும், என்றார்.