மதுரை: மதுரை, கருப்பாயூரணி ரிங்ரோடு அருகே சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை திடீரென்று கூடினர். அவர்கள் தென்னை மர கட்டைகள் மூலம் வாடிவாசல் அமைத்தனர். ஏராளமான இளைஞர்கள் திரண்டு நின்றனர். அப்போது 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வேனில் கொண்டு வந்து இறக்கினர். திடீரென்று ஜல்லிக்கட்டு காளைகளை, ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட்டனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவற்றை பிடித்து அடக்கினர். சில காளைகள் கூட்டத்தில் புகுந்து பலரை முட்டி தள்ளின. சில காளைகள் ரிங்ரோடு வழியாக ரோட்டில் சென்ற வாகனத்தின் மீது மோதி ஓடியது. அங்கு போலீசார் யாரும் இல்லை. கொரோனாவுக்காக 144 தடையுத்தரவு உள்ள சூழலில், எந்த அனுமதியும் இன்றி திடீரென ஜல்லிக்கட்டு நடந்தது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.