சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே இறுதி சடங்கிற்கு சடலத்தை எடுத்து செல்ல பாலமின்றி மக்கள் ஆற்றை கடந்து செல்லும் அவலம் உள்ளது. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள வீரியங்கோட்டை மற்றும் கைவனவயல் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென்று சுமார் 1 கிமீ தொலைவில் வயல்வெளியில் சுடுகாடு அமைந்துள்ளது. அவர்கள் அந்த சுடுகாட்டிற்கு சுமார் 40 ஆண்டு காலத்திற்கு மேலாக பாலம் இன்றி ஆற்றின் உள்ளே இறங்கிதான் சடலத்தை கொண்டு செல்ல வேண்டும். கோடை காலத்தில் சிரமம் தெரிவதில்லை.
அதே சமயம் மேட்டூர் அணை திறந்து தண்ணீர் வரும் காலங்களிலும் மழைக் காலங்களிலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. ஆற்றில் இறங்கித்தான் கரையேற வேண்டியுள்ளது. 40 ஆண்டுகாலமாக அனுபவித்து வரும் சிரமத்தை போக்கும் வகையில் பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.