அறந்தாங்கி: தனது தங்கைக்கு தன் வருமானத்தில் இருந்து பிறந்தநாள் பரிசு வழங்க வேண்டும் என்பதற்காக சிறுவன், சைக்கிள் கடைக்கு வேலைக்கு சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது மகன் கவுதம் (9).அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் கவுதம் தனது தங்கை சங்கமித்ரா (7) மீது அளவுகடந்த பாசம் கொண்டவன். கவுதம் படிக்கும் அதே பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் சங்கமித்ராவுக்கு வரும் 14ம் தேதி பிறந்தநாள். தனது தங்கையின் பிறந்தநாள் அன்று அவளுக்கு பிடித்ததை தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வழங்க வேண்டும், அதற்காக சிறிய வேலை பார்க்க செல்ல வேண்டும் என்று எண்ணிய கவுதம் தனது ஆசையை தாயார் பிரியாவிடம் கூறினான்.
அதற்கு பிரியா தங்கை பிறந்தநாளுக்கு உனக்கு எவ்வளவு பணம் தேவையோ வாங்கிக்கொள், வேலைக்கு எல்லாம் படிக்கிற வயசுல போகக்கூடாது எனக்கூறியுள்ளார். அதற்கு கவுதம் அம்மா தங்கைக்கு பரிசு பொருள் வாங்க எவ்வளவு தேவையோ அந்த பணம் சேரும் வரை மட்டும் வேலைக்கு செல்கிறேன் என பிடிவாதம் பிடித்துள்ளான். மகனின் பிடிவாதத்தால், வேறு வழியின்றி, தங்களுக்கு தெரிந்த சைக்கிள் கம்பெனியில் கவுதமை வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு, பிரியா குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதற்கு சைக்கிள் கடைக்காரர் கவுதமை வேலைக்கு சேர்த்தால், குழந்தை தொழிலாளர் சட்டப்படி நான் தண்டிக்கப்படுவேன் என கூறி மறுத்துள்ளார். இருப்பினும் பிரியா குடும்பத்தினர் சிறுவன் கவுதம் ஆசையை நிறைவேற்றுவதற்காக சைக்கிள் கடைக்காரரிடம் போராடி கவுதமை உங்கள் வீட்டு பிள்ளை கடையில் இருப்பதை போல நினைத்துக் கொள்ளுங்கள் என்று அவரை வேலைக்கு சேர்த்து விட்டனர்.
மேலும் கவுதமிற்கான தினசரி ஊதியமாக ரூ.20 நிர்ணயம் செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பணிக்கு சென்ற கவுதம் சைக்கிள் ரிம்களை சுத்தம் செய்வது முதல் பழுதடைந்த சைக்கிளை சரி செய்வது வரை கற்றுக் கொண்டான். மேலும் தனக்கு கிடைத்த சம்பளத்தை கொண்டு தனது தங்கைக்கு பிடித்த கிளேயை பிறந்தநாள் பரிசாக வழங்க திட்டமிட்டு இன்னும் 3 நாட்களுக்கு மட்டும் தொடர்ந்து பணியாற்ற உள்ளான் கவுதம்.