×

பூகம்பம் வந்தாலும் வரும் அதிமுகவில் பிளவு வராது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ‘‘பூகம்பம் வந்தாலும் வரும்.. அதிமுகவில் பிளவு வராது...’’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பகுதியில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அரசு வழிமுறைகளை பின்பற்றி தான் அதிமுகவின் செயற்குழு கூட்டத்தை நடத்தினோம். ஆனால், இதை காரணம் காட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது உள்ள  அபாய சூழலில் கிராம சபை கூட்டத்தை தவிர்ப்பதன் மூலம் நோய் தொற்றை தடுக்க முடியும். எனவேதான் அதை அரசு தவிர்த்தது.வரும் 6ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் தவறானது. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.வதந்திகளை பரப்பி விட்டு எதிரிகள் துரோகிகள் குளிர்காய நினைக்கின்றனர். அது நிச்சயம் நடைபெறாது. பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால், அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது. பாஜ மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ள கருத்தை நான் ஏற்க மாட்டேன். மீண்டும் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அது நிச்சயம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : earthquake ,Jayakumar ,interview ,AIADMK , AIADMK, Minister Jayakumar, Interview
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி...