×

கூட்டணி குறித்து பேசியது என்ன?: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: கூட்டணி குறித்து கருத்து கூறியது பற்றி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராம சபைக் கூட்டத்தின் முடிவில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது என்னை சந்தித்த செய்தியாளர்கள், ‘திமுக கூட்டணியில் யார் யார் இருப்பார்கள்’ என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு, ‘இப்போது எதையும் அறுதியிட்டு, சொல்ல முடியாது. தேர்தல் காலங்களில் இறுதி நேரத்தில் கூட, கட்சிகள் இடம் மாறுவது உண்டு. அப்படி, இங்கே இருப்பவர்கள் அங்கே போவதும், அங்கே இருப்பவர்கள் இங்கே வருவதுங்கூட கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது’ என்று தான் கூறினேன். வாயில், ‘மாஸ்க்’ அணிந்து பேசிக் கொண்டிருந்த காரணத்தால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம்.

அதனை நான் ஒருமையில் பேசியதாக சில பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதாகவும், அதனால், எங்களிடத்தில் ஆழ்ந்த உறவோடு இருக்கக்கூடிய சிலர் வருத்தம் அடைந்திருப்பதாகவும் எனக்கு செய்திகள் வந்தது. நான் அவ்வாறு கூறவில்லை. அப்படி நான் கூறியதாக எடுத்துக் கொண்டாலும், அதற்காக நான் மெத்த வருத்தப்படுகிறேன். பொதுவாக, நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, எனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எனவே, யாருடைய உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால், அதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால், எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நீண்டகாலமாக என்னை அறிந்தவர்கள், அப்படி நினைக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும், இனி இப்படி நிகழா வண்ணம் நானும் நடந்து கொள்வேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Duraimurugan ,alliance ,DMK , DMK, General Secretary, Thuraimurugan
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி