×

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கணேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஜூலை மாதம் 25 ம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தந்தை அனுமதித்து வெவ்வேறு தேதிகளில் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் சிகிச்சை கட்டணமாக  செலுத்தினோம். உரிய சிகிச்சை வழங்காததால் கடந்த ஆகஸ்ட் 3 ம் தேதி குமார் இறந்து விட்டார் என மருத்துவமனை தெரிவித்தது.

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்ததோடு உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் மீண்டும் 2 லட்சத்து 44 ஆயிரம் கட்ட வேண்டுமென மருத்துவமனை நிர்பந்தப்படுத்தி மொத்தமாக 10 நாளைக்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 562 ரூபாய் வசூலித்தது. தந்தையின் மருத்துவ செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற, காப்பீட்டு நிறுவனத்தில் கோர ஏதுவாக மருத்துவ விவரங்களை கேட்ட நிலையில் தந்தையின் மருத்துவ விபரங்களுக்கு பதிலாக வேறு ஒருவரின் சிகிச்சை விவரங்களை வழங்கியது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது மருத்துவமனை நிர்வாகத்தினர் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கு மனு அளித்த நிலையில், அந்த  மனு மீது விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியருக்கு ஐ. சி.எம்.ஆர் பரிந்துரை செய்து. ஆனால், இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக  வசூலித்த தொகையை திரும்ப தருமாறும், மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : hospital ,hearing ,Chennai High Court , Corona, investigation
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...