திருவனந்தபுரம்,: கொரோனா பாதிப்பால் தத்தளிக்கும் மலையாள படவுலகில், மோகன்லாலை தொடர்ந்து நடிகர்கள் டோவினோ தாமஸ், ேஜாஜூ ஜார்ஜ் ஆகியோர் தங்களுடைய சம்பளத்தை குறைக்க முன்வந்துள்ளனர்.கொரோனா பாதிப்பால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் கேரள சினிமா துறையை மீட்டெடுக்க நடிகர், நடி கைகள் உட்பட அனைவரும் தங்கள் ஊதியத்தை குறைக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து மோகன்லால் தான் நடிக்கும் ‘திரிஷ்யம் 2’ திரைப்படத்துக்கு தனது சம்பளத்தை பாதியாக குறைத்து அறிவித்தார்.
இந்நிலையில் நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், டோவினோ தாமஸ் ஆகியோர் தங்கள் சம்பளத்தை குறைக்க ஒப்புக்கொண்டதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டோவினோ தாமஸ் புதிய படத்துக்கு சம்பளம் கேட்க மாட்டேன் என்றும், படம் வெற்றிபெற்றால் தயாரிப்பாளரின் பங்களிப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.இதுபோல் ஜோஜூ ஜார்ஜ் தனது சம்பளத்தில் 20 லட்சம் குறைத்துக் கொள்ள சம்மதித்தார். இதனால், 2 படங்களின் ஷூட்டிங் தொடர்பான சிக்கல் நீங்கியது. இதற்குமுன்பு ஆபிரகாம் மேத்யூ தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஜோஜூ ஜார்ஜ் 50 லட்சம் கேட்டிருந்தார். அதுபோல் ஷம்சுதீன் தயாரிக்கும் படத்தில் நடிக்க, டோவினோ தாமஸ் 1 கோடி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை
மலையாள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மோகன்லால், மம்மூட்டி உள்பட பல நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தை குறைப்பதாக அறிவித்தனர். அதன்படி தற்போது ‘திரிஷ்யம்’ 2ம் பாகத்தில் நடிக்கும் மோகன்லால், தனது வழக்கமான சம்பளத்தில் இருந்து 50 சதவிகிதம் குறைத்துள்ளார். மோகன்லாலை போல் மற்ற நடிகர்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சதவிகிதமாவது குறைக்காவிட்டால், அவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று கேரளா தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கேரளா திரைப்பட தொழிலாளர் அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.