சென்னை,: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவசுப்பிரமணி தாக்கல் செய்த மனுவில், சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 1959ம் ஆண்டு ஏரி புறம்போக்கு நிலம் கல்வி பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு, சுமார் ஒன்றேகால் ஏக்கர் பரப்பில் சிங்காரம் பிள்ளை அரசு உதவிபெறும் பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது
இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சிங்காரம்பிள்ளை கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஒருவர், அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் தனி நபர்கள் சிலருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார்.
இதில் பெரிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இது தொடர்பாக முதல்மைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சட்டவிரோதமாக கட்டப்பட்ட அந்த கட்டிடங்களை இடித்து பள்ளி நிலத்தை மீட்டு தருமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும், என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.