காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் அருகே தம்மனூர் கிராமத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் மசோதாவை கண்டித்தும், இந்த சட்டத்தை ஆதரித்து விவசாயிகளை வஞ்சிக்கும் அதிமுக அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர். ஒன்றிய செயலாளர் க.குமணன், ஊராட்சி செயலாளர் தயாளன், கெங்கன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கீழம்பியில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் தலைமையில், ஊராட்சி செயலாளர் மாரிமுத்து, முசரவாக்கத்தில் மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், சிறுகாவேரிப்பாக்கத்தில் வக்கீல் சசிக்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில், முத்தியால்பேட்டை மற்றும் 61 ஊராட்சி மன்றங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. செய்யூரில், செய்யூர் ஊராட்சி திமுக செயலாளர் தணிகாசலம் தலைமையில், லத்தூர் ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்மொழிவர்மன் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திமுக பிரமுகர் தாமோதரன் தலைமையில், நிர்வாகிகள் தமின், சம்சுகனி, கயல் மாரிமுத்து, முரளி, கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டு அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளர் எஸ்கேபி கோபிநாத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால், மாவட்ட செயலாளர் க.சுந்தர் உள்பட 30 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ், மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில், திமுக ஒன்றிய துணை செயலாளர் அருள்தேவி, ஆலப்பாக்கம் ஊராட்சியில் ஒன்றிய பொருளாளர் திருமலை, ஒழலூர் ஊராட்சியில் ஈஸ்வரி, வல்லத்தில் ஜெயக்குமார், வெங்கடாவரத்தில் தருமன், கொளத்ததூரில் சண்முகம், சிங்கப்பெருமாள் கோயிலில் ராஜன், வீராபுரத்தில் ஜீவனாந்தம், பாலூரில் முத்துகுமார் ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சியில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.