சென்னை: “தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு குடும்ப சூழ்நிலை வறுமை உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகள் வசிக்கின்றனர். இதில் தமிழகம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா, மேகாலயா, மற்றும் மிசோரம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 1.84 லட்சம் குழந்தைகள் காப்பகங்களில் உள்ளனர். இந்நிலையில் இந்த குழந்தைகளை அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எட்டு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. வறுமையை காரணம் காட்டி ஒரு குழந்தையை குடும்பத்தில் இருந்து பிரித்து காப்பகங்களில் அனுமதிப்பதை ஏற்க முடியாது. வறுமை காரணமாக ஒரு குழந்தை காப்பகத்தில் வசிக்கிறது என்றால் அது சம்பந்தப்பட்ட மாநில அரசின் தோல்வியையே உணர்த்துகிறது. குழந்தையை தங்களுடன் வைத்து பராமரிக்கும் அளவுக்கு குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டியது மாநில அரசின் கடமை.
காப்பகங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. எனவே எட்டு மாநிலங்களில் குழந்தைகள் காப்பங்களில் வசிக்கும் குழந்தைகளை அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கும் பணியினை 100 நாள்களுக்குள் மாநில அரசுகள் துவக்க வேண்டும். மேலும் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 தென் மாநிலங்கள் ஆணையத்தின் சார்பில் பல்வேறு அமர்வில் கலந்து கொண்டு பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு அளித்து, குழந்தைகள் காப்பகங்களில் நேரடி ஆய்வு செய்ததின் பயனில் இன்று இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த 8 மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.