சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி திருவாரூரில் செய்தியாளர்களிடம், உச்ச நீதிமன்றம் வரையறுத்த அளவுப்படி கர்நாடகம் மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டுமென்று கேட்டு வருகிறோம். கர்நாகடமும் அதைத் தந்து வருகிறது என்று தெரிவித்ததாக ஏடுகளில் செய்தி வந்தது. முதலமைச்சரின் கருத்து தமிழகத்திற்குப் பாதகத்தையே ஏற்படுத்தும்.
மத்திய அரசு பெயரளவுக்கு அமைத்த காவிரி ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ்வப்போது “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும்” என்று கர்நாடகத்திற்கு உத்தரவு போடுவதும், அதனை கர்நாடக அரசு அலட்சியப் படுத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் உண்மை நிலையை மூடி மறைத்துத் தகவல்களை வெளியிடுவது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பலிகொடுத்துவிடுவது போல ஆகிவிடும். எனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின்படி, காவிரியில் தண்ணீரைப் பெறுவதற்கு தமிழக அரசு முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.