சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மழை, வெள்ளம் தொடர்பான விவரங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரம் மின்சாரம் வழங்க ஏதுவாக கூடுதலாக ஜெனரேட்டரை வாடகைக்கு வாங்கி வைக்க பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தமழை காலக்கட்டங்களில் பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகள் மற்றும் 15 ஆயிரம் ஏரிகளின் நீர் இருப்பு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழை அளவு மற்றும் வெள்ளம் தொடர்பான விவரங்களை கண்காணிப்பதற்காக கட்டுபாட்டு அறை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அணைகள் இயக்ககம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தில் 2வது மாடியில் நேற்றுமுன்தினம் முதல் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை வடகிழக்கு பருவமழை காலகட்டமான கடந்த 1ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் (விடுமுறை நாட்கள் உட்பட) டிசம்பர் 31ம் தேதி வரை செயல்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேர சுழற்சி அடிப்படையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று முக்கிய அணைகள் மற்றும் கோவை, மதுரை, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஊழியர்கள் அனைத்து விவரங்களையும் சேகரித்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு சார்பில் அரசு மருத்துகல்லூரி உடன் கூடிய மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் ஐசியு, சிசியு வார்டுகளில் மின் இணைப்பு தர வேண்டும். கூடுதலாக ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கி வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.