சின்னாளபட்டி: ஆத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே சேதமடைந்த நிலையில் உள்ள வேளாண் அலுவலர் குடியிருப்புகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே வேளாண் அலுவலர்களின் குடியிருப்புகள் உள்ளன. உரிய பராமரிப்பில்லாததால், இந்த குடியிருப்புகள் சேதமடைந்து, புதர் மண்டிக்கிடக்கிறது.
பாம்புகள் நடமாட்டம் அப்பகுதியில் அதிகம் இருப்பதாகவும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் பாம்புகள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால், முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து மேலும் புதராய் காட்சியளிக்கிறது. புதர்களை அகற்றுவதுடன், குடியிருப்புகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.