×

ஓ பன்னீர் செல்வத்திற்கும் , முதல்வர் பழனிசாமிக்கும் சண்டையே இல்லை, சண்டை இருந்தால் தானே சமாதானம் செய்ய முடியும் :அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை : அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு அக்டோபர் 7ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜி கணேசனின் சிந்து நதியின் மிசை போன்ற பாடல்களைப் பாடி அவரை நினைவுக் கூர்ந்தார். மேலும் சிவாஜி கணேசன் ஒரு வரலாறு, பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் சிவாஜி, என்றார். ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சமாதானம் ஆகிவிட்டார்களா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஓ பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் சண்டையே இல்லை. சண்டை இருந்தால் தானே சமாதானம் செய்ய முடியும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது, திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சியின் விதிகள் தெரியும். அதன்படி தவறான முறையில் பேச வேண்டாம். செயற்குழுவில் கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் வெளியில் கருத்து கூறுவது தவறு. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்துவதில் என்ன தவறு. கட்சிகாரர்களுடன் தானே ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். ஓபிஎஸ் மாற்று கட்சியினரை அழைத்து பேசவில்லை. தன் சொந்த கட்சியினருடன் தான் பேசினார். ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை. வட வியட்நாம்.. தென் வியட்நாம் என்றெல்லாம் இல்லை. ஒரே வியட்நாம் தான். அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்புக்கு அக்.7 வரை பொறுத்திருந்து பாருங்கள். ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே. வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே. சண்டை நடந்தால் தானே சமாதானம் செய்வதற்கு. கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம், என்றார். 


Tags : Palanisamy ,fight ,Minister Jayakumar , O Panneer Selvam, Chief Minister Palanisamy, Minister Jayakumar, Interview
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...