சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணிகள்-2க்கான நேர்காணல் தேர்வு வரும் 19ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் தேர்வு-2ல் உள்ள காலிப்பணியிடங்கள் 1,334க்கான தேர்வு கடந்த 23.2.2019ல் நடந்தது. 13,816பேர் கலந்து கொண்டனர். அவர்களில் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தேர்வு வரும் 19.10.20ல் நடக்கிறது. கைத்தறிகள் மற்றும் ஜவுளி துறையில் காலியாகவுள்ள 19 முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான தேர்வு கடந்த 11.5.19ல் நடந்தது.
இதில் 999பேர் கலந்து கொண்டனர். அவர்களில் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தேர்வு வரும் 16.10.20ல் நடக்கிறது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் காலியாகவுள்ள 20 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு 27,28,29.7.19ல் நடந்தது. இதில் 807 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தேர்வு வரும் 19.10.20ல் நடக்கிறது. மேலும் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு/ நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்கள் மற்றும் தேர்வாளர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.