×

கொரோனா பரவலால் இக்கட்டில் சினிமாத்துறை ‘திருஷ்யம் 2’ படத்திற்கு சம்பளத்தை குறைத்தார் நடிகர் மோகன்லால்

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லால் தனது புதிய மலையாள திரைப்படத்துக்கு சம்பளத்தை குறைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சினிமா துறையும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா நிபந்தனைகளை கடைபிடித்து படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. மலையாள சினிமாவில் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது புதிய படத்துக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளார். இவர் தற்போது ‘திருஷ்யம் 2’  என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனாவுக்கு முன்பு மோகன்லால் வாங்கிய சம்பளத்தில் தற்போது 50 சதவீதம் குறைவாக இந்த படத்துக்கு வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் 2 மலையாள நடிகர்கள் சம்பளத்தை அதிகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு முன்பு ரூ.45 லட்சம் வாங்கிய நடிகர், தற்போது புதிய படத்துக்கு ரூ.50 லட்சமும், ரூ.75 லட்சம் வாங்கிய இன்னொரு நடிகர் ஒருகோடியும் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்தி வைப்பது தொடர்பாக மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது. மேலும் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவுகளை குறைக்க கோரி, இந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு, சங்கம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான பதில் கிடைத்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கேரள அரசு கேளிக்கை வரியை குறைத்தால் மட்டுமே புதிய படங்களை ரிலீஸ் செய்வோம் எனவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags : Mohanlal ,spread ,Corona , Actor Mohanlal cuts salary for 'Thirushyam 2'
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...