கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கடந்த செப்.1 முதல் சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, குணா குகை, பைன்மர காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த பகுதிகளில் இன்றுமுதல் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. ஆனால், தமிழக அரசு நேற்று முன்தினம், அக்.31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து வனத்துறை ரேஞ்சர் கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இன்று முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அரசு அக்.31 வரை தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த பகுதிகள் திறக்கப்படாது. அரசின் புதிய வழிகாட்டுதல் மற்றும் உத்தரவு வந்த பின்னர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.