திருச்சி: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் கடந்த 26ம் தேதி மதியம் பைக்கில் வந்த 12 பேர் கும்பல், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள இசக்கிபாண்டி வீட்டின் மீது வெடிகுண்டு வீசி, அவரது தாய் சாந்தி (40)யை அரிவாளால் வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல், நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய் வீட்டுக்கு சென்று அவரையும் கொலை செய்தது. பழிக்குப்பழியாக நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக நாங்குநேரி போலீசாரால் தேடப்பட்ட தூத்துக்குடி சிதம்பரம் நகர் அண்ணாநகர் 12வது தெருவை சேர்ந்த கண்ணன் (35), தூத்துக்குடி அண்ணாநகர் சொரிமுத்து(67), திருநெல்வேலி வேப்பிலாங்குளம் விநாயகபுரம் சுடலைக்கண் மகன் முருகன் ஆகிய 3 பேரும் நேற்று திருச்சி ஜேஎம் 1 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 6ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கார்த்திக்ஆசாத் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.