நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் முறையாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடையும் நிலை உள்ளது. நாகர்கோவில் மாநகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இவற்றில் வடசேரி அண்ணா சிலை சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு வெட்டூர்ணிமடம் சந்திப்பு, பால்பண்ணை சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு, பறக்கை விலக்கு சந்திப்பு, ஈத்தாமொழி விலக்கு சந்தப்பு ஆகிய இடங்களில் உள்ள சிக்னல்கள் முக்கியமானதாகும். தானியங்கி, சிக்னல்களாக இருந்தன.
இதில் ஒரு சில சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் நின்றும் கண்காணிப்பார்கள். குறிப்பாக கலெக்டர் அலுவலக சந்திப்பு சிக்னல் மிக முக்கியமான பகுதியில் இருந்ததால், தானியங்கி முறையில் இருந்தாலும் டிராபிக் போலீசார் நிற்பது வழக்கம். இதற்காக தனியார் நிறுவனங்களை விளம்பரதாரர்களாக பிடித்து, அவற்றை பராமரிக்கும் பணிகளையும் செய்தனர். கண்காணிப்பு கேமராக்களும் இவற்றில் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் காலப்போக்கில் இந்த சிக்னல்கள் செயல் இழந்தன. சாலை விரிவாக்கத்துக்காக கலெக்டர் அலுவலக சிக்னல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அது செயல்படுத்தப்பட வில்லை.
ஒரே ஒரு டிராபிக் போலீஸ்காரர் நின்று, கடும் சிரமத்துக்கு இடையே போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இதே போல் நகரில் மற்ற இடங்களில் உள்ள சிக்னல்களும் செயல் இழந்த நிலையில் உள்ளன. முக்கிய சந்திப்புகளில் சிக்னல்கள் இல்லாததால், நாலாபுறமும் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சிக்கி திணறும் நிலை உள்ளது. இதனால் விபத்து அபாயங்களும் உருவாகி உள்ளன. நாகர்கோவில் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும். கொரோனா ஊரடங்கிற்கு பின், பைக், கார்களில் வருபவர்கள் அதிகரித்துள்ளனர். டவுன் பஸ்கள் இயங்கிய போதும்,
தற்போது கிராமப்புறங்களில் இருந்து பைக்குகளில் வருபவர்கள் அதிகரித்துள்ளனர். எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் நெருக்கடியும் அதிகமாக உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு போக்குவரத்து சிக்னல்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.