×

ராமர் கோயிலை காண படிக்கல்லாக அமைந்த தீர்ப்பு: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அத்வானி உள்ளிட்டோர் வரவேற்பு...!

லக்னோ: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த  1992ம் ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரித்தார். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31க்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தினசரி நடந்தது.

பாஜ மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடந்த ஜூலை 24-ம் தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்தனர். இதில் இருவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து வழக்கின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிபதி எஸ்.கே.யாதவ், வழக்கை முடிக்க காலஅவகாசம் கோரினார். அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் இன்றைக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, லக்னோ சிபி‌ஐ சிறப்பு நீ‌திமன்ற நீதிபதி‌ எஸ்.கே.யாதவ், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் 2,000 பக்கத் தீர்ப்பை இன்று முற்பகல் 11.45 மணிக்கு நீதிமன்ற அறை எண்: 18ல் வாசித்தார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை. மசூதி இடிக்கும் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தவில்லை.  மசூதியை இடித்த கரசேவர்களை குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலைவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்க தூண்டவில்லை. அதனால், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர்’ என்று தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் பாபர் மசூதி தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; பாஜக தலைவர்கள் மீதும், துறவிகள் மீதும் காங்கிரஸ் அரசு பொய் வழக்குகள் புனைந்தது தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் வழக்குகள் போடப்பட்டதற்காக, சம்பந்தப்பட்டவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து மகிழ்ச்சியடைந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஜெய் ஸ்ரீராம் எனக்ககூறி தீர்ப்பை வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அத்வானி, அயோத்தியில் ராமர் கோயிலை காண படிக்கல்லாக அமைந்த மற்றும் ஒரு தீர்ப்பு என்று தெரிவித்தார்.

இது நீதிமன்றத்தின் வரலாற்று முடிவு. அயோத்தியில் டிசம்பர் 6 சம்பவத்திற்கு எந்த சதியும் செய்யப்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. எங்கள் திட்டமும் பேரணிகளும் எந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ராம் மந்திரின் கட்டமைப்பைப் பற்றி எல்லோரும் இப்போது உற்சாகமாக இருக்க வேண்டும் என்று முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். இருப்பினும், வழக்கினை மேல்முறையீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.



Tags : Ram Temple ,UP ,Babri Masjid ,Yogi Adityanath ,Advani , Judgment on stepping stone to see Ram temple: UP verdict on Babri Masjid case Chief Minister Yogi Adityanath, Advani and others welcome ...!
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...