×

வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வறண்ட ஏரியில் மலைபோல் குவியும் குப்பைகள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை ஏரியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை ஏரி 10 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் வரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைகின்றனர். மேலும், இந்த ஏரியில் செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு மற்றும் அவரது மனைவி ராணி பாய் ஆகியோர் ஆற்காட்டில் தங்கியிருந்தபோது மாலை நேரங்களில் படகில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக விஷமிகள் ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்தும், சிப்காட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து அகற்றும் கழிவுகள் சிமென்ட் ஷீட்டுகள் மற்றும் குப்பைகள் குவியல் குவியலாகவும் மலைபோல் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் குப்பை கழிவுகளால் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து வறண்டு காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடகிழக்கு பருவ மழைக்கு முன் ஏரியை முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் பணி மேற்கொண்டு சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : mountain ,lake , Aggression, Lake
× RELATED ஏற்காடு 11-வது கொண்டை ஊசி...