×

சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்? : என்ஐஏ வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி,:தீவிரவாதம் தொடர்புடைய வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பால், சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை நிறுவுவதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமையகம் டெல்லியில் செயல்படும் நிலையில், அதன் கிளைகள் மும்பை, கவுகாத்தி, ஜம்மு காஷ்மீர், கொல்கத்தா, ஐதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர், சண்டீகர் ஆகிய இடங்களில் உள்ளன. சமீபகாலமாக ெதன்மாநிலங்களில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆதரவளிப்போர் தொடர்பாக சிலரை தேசிய பாதுகாப்பு அமைப்பு கைது செய்துள்ளது. குறிப்பாக பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் தீவிரவாத கும்பலின் தொடர்புகள் அதிகமாக உள்ளதாக பல்வேறு உளவு தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சென்றன.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கிளையை சென்னை (தமிழ்நாடு), ராஞ்சி  (ஜார்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க மத்திய  உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘தமிழ்நாடு, கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையதாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் என்ஐஏ விசாரிக்கும் வழக்குகளை கொச்சியில் உள்ள கிளை நிர்வகித்து வருகிறது. புதிய அலுவலக கிளைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) நிலையிலான அதிகாரி தலைமை தாங்குவார்.

நாடு முழுவதும் கடந்த ஏழு ஆண்டுகளில் மொத்தம் 351 தீவிரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகளை என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. தமிழகத்தில் இந்தாண்டு இரண்டு வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களை தமிழக காவல்துறையின் ‘க்யூ’ பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பின்னர் இவ்வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. ேபாலீஸ் எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு, கடந்த 2014ல் புதுச்சேரியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு, 2014இல் பிரதமர் அலுவலக இணைய அமைச்சராக இருந்த தற்போதை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் வீட்டு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இவற்றை தவிர, தமிழ்நாட்டில் மேலும் ஆறு வழக்குகளை என்ஐஏ விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளில் தொடர்புடைய பலரும் ஐஎஸ் தீவிரவாத குழுவுடன் தொடர்புடையவர்கள். மேலும், நிர்வாக வசதிக்காக சென்னையில் என்ஐஏ கிளை நிறுவப்படுகிறது. மூன்று புதிய கிளைகளுடன், நாடு முழுவதும் 12 கிளை அலுவலகங்களுடன் செயல்படும். மூன்று புதிய கிளைகள் உருவாக்கப்படுவதன் மூலம் என்ஐஏ-யின் செயல்பாடுகள் துரிதமாகும். தீவரவாத செயல்பாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும். நாட்டில் தீவிரவாத கட்டமைப்புகள் உருவாவதை தடுக்க முடியும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : NIA branch ,Imphal ,Chennai ,Ranchi , Chennai, Imphal, Ranchi, NIA, Branch, Sources, Information
× RELATED மணிப்பூரில் தேர்தல் நெருங்கும்...